பிறந்தநாளன்று கோவிலில் இனிப்பு வழங்கியபோது சுடிதாரில் தீப்பிடித்து +1 மாணவி பலி
சென்னை: சென்னையில் பிளஸ் 1 மாணவி ஒருவர் தனது 15வது பிறந்தநாளை முன்னிட்டு கோவிலில் இனிப்பு வழங்கியபோது சுடிதாரில் தீப்பிடித்து உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார்.
சென்னை கோயம்பேடு அய்யப்பர் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் ரவி. அவரது மகள் ரேஷ்மி(15). அவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார். அவர் கடந்த 3ம் தேதி தனது 15வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு அருகில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் தியான மண்டபத்திற்கு சென்றார்.
அந்த மண்டபத்திற்கு வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது பலர் வேண்டுதலுக்காக அங்கு விளக்கேற்றி வைத்தனர். ரேஷ்மி இனிப்பு வழங்கிக் கொண்டிருக்கையில் அவரது சுடிதார் அங்கிருந்த விளக்கில் பட்டுத் தீப்பிடித்தது. தீ அவரது உடல் முழுவதும் வேகமாகப் பரவியது. சூடு தாங்க முடியாமல் அவர் அலறினார்.
உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து ரேஷ்மியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.