மும்பை ஸ்டைலில் மேலும் ஒரு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டினேன்: அபு ஜிண்டால் தகவல்

சவூதி அரேபியால் பதுங்கியிருந்து பிடித்து கொடுக்கப்பட்ட அபு ஜிண்டால் டெல்லி போலீஸின் கஸ்டடியில் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறான். அதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு எப்படியெல்லாம் தொடர்பு இருந்ததையும் போட்டு உடைத்திருக்கிறான்.
இதேபோல் லாகூர் போலீஸ் அகாதெமி மீது நடத்தப்பட்ட தாக்குதலை வீடியோ படம் பிடித்து அதே பாணியில் நாசிக்கில் உள்ள போலீஸ் அகாதெமியை தாக்கவும் திட்டம் தீட்டியிருந்ததாகவும் கூறியிருந்தான் அபு ஜிண்டால்.
தற்போது மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர்26-ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்றே இந்தியாவின் வேறு ஒரு நகரத்தில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியிருந்ததாகவும் ஆனால் அது எந்த நகரம் என்பதை முடிவு செய்யாமல் இருந்ததாகவும் கூறியிருக்கிறான். மும்பை தாக்குதல் 4 நாட்கள் நடைபெற்றது. 166பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிமி இயக்கம் தடை செய்யப்பட்ட பிறகு பலரும் வெவ்வேறு தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்திருப்பதையும் அபு ஜிண்டால் தெரிவித்திருக்கிறான். மும்பை தாக்குதல் முடிந்த பிறகு தன்னை முழுவதுமாக ஒரு பாகிஸ்தான் நாட்டுக் குடிமகனாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறான் ஜிண்டால். இதற்காகவே 2009-ம் ஆண்டு கராச்சி நகரைச் சேர்ந்த பெண் ஒருவரையும் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இந்தியாவுடனான அனைத்து தொடர்புகளையும் மெதுமெதுவாக கைவிடும் வேலையிலும் மும்முரம் காட்டியிருந்திருக்கிறான் ஜிண்டால் என்கின்றனர் விசாரணை நடத்திய போலீஸார்.












Click it and Unblock the Notifications