மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் கார் மோதி 2 பேர் படுகாயம்: கார் டிரைவர் மீது வழக்கு
நாமக்கல்: நாமக்கல் அருகே வேகமாக காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வனின் டிரைவர் பிரபாகரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் தில்லலைபுரத்தில் திமுக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் காந்திசெல்வன் வீடு உள்ளது. அவர் நேற்று காலை 10.30 மணியளவில் பரமத்தியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நாமக்கல் நோக்கி தனது இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தார். காரை சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டினார்.
அந்த கார் நாமக்கல் ஈ.பி. காலனி அருகில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகே அதிவேகமாகச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த நாமக்கல் எம்.ஜி.ஆர். நகர் விஸ்வநாதன் (50) என்பவரது இடது கால் எழும்பு முறிந்தது. இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நாமக்கல் ஈ.பி. காலனி வீரப்பன் (55) என்பவர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காந்திசெல்வன் கார் டிரைவர் பிரபாகரன் மீது நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications