குடியரசு துணைத் தலைவர்: மீண்டும் தென்னகத்தை புறக்கணித்து மரபுகளை காற்றில் பறக்க விடும் காங்.!

குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் ஆரம்பம் முதலே ஒரு மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது குடியரசுத் தலைவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால், துணைத் தலைவர் தென் மாநிலத்தவராக இருப்பார். இதுதான் ராஜேந்திர பிரசாத் முதன் முதலில் குடியரசுத் தலைவரானது முதல் நடந்து வந்தது.
இடையில் 2 முறை இரு பதவிகளிலும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். அதாவது, 2வது குடியரசுத் தலைவராக தென்னகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் இருந்தபோது, துணைக் குடியரசுத் தலைவராக தென்னகத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் இருந்தார்.
அதேபோல வட மாநிலத்தைச் சேர்ந்த வி.வி.கிரி குடியரசுத் தலைவராக இருந்தபோது துணைக் குடியரசுத் தலைவராக வட மாநிலத்தைச் சேர்ந்த கோபால் ஸ்வரூப் பாதக் இருந்தார். ஆனால் மற்ற சமயங்களில் இரு பகுதிகளையும் சேர்ந்தவர்களே மாறி மாறி இப்பதவிகளை அலங்கரித்தனர்.
இந்த மரபை காங்கிரஸ் கட்சி மீண்டும் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவரானபோது மீறியது. அதாவது துணைக் குடியரசுத் தலைவராக வட மாநிலத்தைச் சேர்ந்த ஹமீத் அன்சாரியை நியமித்தனர்.
இந்த நிலையில் மறுபடியும் மரபை மீற முனைந்துள்ளது காங்கிரஸ். குடியரசுத் தலைவர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியை நிறுத்தியுள்ள காங்கிரஸ் கட்சி, துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவரான அன்சாரியையே மீண்டும் நிறுத்த தீர்மானித்துள்ளது. இதற்காக ஆதரவையும் திரட்ட ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் இது நாள் வரை இருந்து வந்த மரபை மீறுவதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து 2வது முறையாக தென்னகத்தையும் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
இந்த மரபை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்து வந்த கட்சிகளில்முக்கியமானது திமுகதான். ஆனால் கடந்த முறையும் இந்த மரபு மீறல் குறித்து திமுக அலட்டிக் கொள்ளவில்லை. இந்த முறையும் அது எதுவும் பேசுவதாகத் தெரியவிலல்லை.
தென்னகத்தின் மீது காங்கிரஸுக்கு ஏன் இவ்வளவு கோபமோ...?












Click it and Unblock the Notifications