வீரபாண்டி ஆறுமுகம் மீது இன்னொரு நில அபகரிப்பு புகார்!
சேலம்: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மற்றொரு நில அபகரிப்பு புகார் தரப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவ வீரரான சண்முகம் (50) என்பவர் சேலம் மாவட்ட எஸ்.பி அஸ்வின் கோட்னிசிடம் தந்துள்ள புகாரில்,
சேலம் -கோவை நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் சிரஸ்தர்காட்டில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமான பொறியியற் கல்லூரிக்கு அருகில் எனது தந்தை கே.நல்லப்பனுக்கு (75) சொந்தமாக 2.36 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் ஐடி பார்க் வரவிருப்பதாகக் கூறி வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகரும் முன்னாள் தாசில்தார் ஸ்ரீரங்கநாதரும் அந்த நிலத்தை வீரபாண்டி ஆறுமுகத்திடம் தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.
நிலத்தைத் தராவிட்டால் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ளும் என்றும் அவர்கள் மிரட்டினர்.
ஆனால் எனது தந்தை நல்லப்பன் தர மறுத்தார். எனவே அவரை அழைத்துக் கொண்டு வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
அங்கு எனது தந்தையை மிரட்டி நிலத்தை பத்திரம் செய்து கொண்டனர். அதில் எனக்கு சேர வேண்டிய 0.57 சென்ட் நிலத்தை எனது கையெழுத்து இல்லாமல் பத்திரம் செய்துள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு தற்போது ரூ 2 கோடி.
எனவே மோசடியாக நிலத்தை பறித்துக் கொண்ட வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா, வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர், முன்னாள் தாசில்தார் ஸ்ரீரங்கநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் தனது புகாரில் கூறியுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் அங்கம்மாள் காலனி வழக்கு, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டி ஆறுமுகம் நாளை சென்னையில் ஆஜர்:
இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது தவறு என்று கூறி அவரது துணைவியார் சென்னை அட்வைசரி போர்ட்டில் மனு செய்துள்ளார்.
இதன் மீது நாளை விசாரணை நடக்கிறது. வீரபாண்டி ஆறுமுகத்திற்காக மூத்த வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகிறார். போலீஸ் தரப்பில் பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆஜராகி விளக்கம் தர உள்ளார்.
ஒரு மாதத்திற்கு மேலாக வேலூர் சிறையில் உள்ள ஆறுமுகம் இந்த விசாரணைக்காக நாளை சென்னை கொண்டு வரப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications