திருச்சி அருகே சாலை விபதத்தில் பாமக மாநில இளைஞரணி செயலாளர் அறிவுச்செல்வன் பலி
திருச்சி: திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் பாமக மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவுச்செல்வன் பலியானார்.
திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் பாமக மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவுச்செல்வன்(35). அவரது மனைவி மீனாட்சி. அவர்களுக்கு அபராஜித் வர்மன், ஆளவந்தான் என்னும் 2 மகன்கள் உள்ளனர்.
பாமக சார்பில் ஜூலை 11ம் தேதி நடக்கும் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் குறித்து பல ஊர்களுக்கு சென்று அங்குள்ள நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து வந்தார். நேற்று அவர் சென்னை சென்றுவிட்டு இரவு நேரத்தில் அங்கிருந்து காரில் திருச்சி திரும்பிக் கொண்டிருந்தார். காரை அனுமந்தபுரம் வாலாஜாநகர் பகுதியைச் சேர்ந்த சத்யசீலன் (39) ஓட்டினார்.
அந்த கார் நள்ளிரவு 12.45 மணிக்கு திருச்சியை அடுத்து உள்ள கொள்ளிடம் டோல்கேட் அருகே சென்றபோது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வேகமாகச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சில மீட்டர் தூரம் பறந்து சென்று விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த அறிவுச்செல்வனும், சத்யசீலனும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அறிவுச்செல்வன் இறந்தார். சத்யசீலனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்ப்டடுள்ள அறிவுச்செல்வனின் உடலுக்கு பாமக மாநில துணை பொதுச் செயலாளர் உமாநாத், கண்ணதாசன், இளைஞரணி துணை செயலாளர் பிரின்ஸ், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொலைபேசி மூலம் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு அறிவுச்செல்வனின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூரில் அடக்கம் செய்யப்படும்.












Click it and Unblock the Notifications