குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப் முகர்ஜிக்கு அதிமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜிக்கு அதிமுக கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஆரோக்கியமானது இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி மற்றும் பாஜக ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மா ஆகிய இருவரில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து உயர்நிலை குழு பரிசீலனை செய்தது.
காங்கிரஸ் கட்சியில் நேரு வகுத்த மதச்சார்பற்ற மாண்புகளை தூக்கிப்பிடிக்கும் தலைவர்களில் பிரணாப் முகர்ஜி குறிப்பிடத்தக்கவர். எனவே, காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என உயர்நிலை குழு முடிவு செய்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது மனிதநேய மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக சங்மாவை ஆதரிக்கையில், மனிதநேய மக்கள் கட்சியோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications