ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து கொழும்பில் பேசுகிறார் ஜெயராம் ரமேஷ்
டெல்லி: மத்திய அரசு இந்தியாவில் அமல்படுத்தி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து கொழும்பில் நடைபெறும் கருத்தரங்கில் பேசுகிறார் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ். இதற்காக அவர் கொழும்பு போயுள்ளார்.
3 நாட்கள் ஜெயராம் ரமேஷ் கொழும்பில் இருப்பார். லக்ஷ்மண் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் உத்திகளுக்கான கல்வி நிறுவனம் நடத்தும் கருத்தரங்கில் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்ட அமலாக்கம் தொடர்பான தனது அனுபவங்களை ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்து கொள்கிறார்.
அதைத் தொடர்ந்து அவரது முன்னிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வளரும் நாடுகளுக்கு இடையிலான ஆராய்ச்சி மற்றும் தகவல் பரிமாற்ற முறை தொடர்பான உடன்படிக்கை கையெழுத்தாகவுள்ளது.
அதன் பின்னர் பண்டாரநாயக சர்வதேச கல்வி நிலையத்தில் "தெற்காசியாவில் மாறி வரும் இந்தியாவின் பங்களிப்பு' குறித்து அவர் பேசுகிறார்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார் ஜெயராம் ரமேஷ்.
சமீபத்தில் சிவசங்கர மேனன் கொழும்பு சென்று திரும்பினார். இந்த நிலையில் தற்போது ஜெயராம் ரமேஷ் போயுள்ளார். கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளதாக கூறப்பட்டாலும் மத்திய அரசிடமிருந்து குறிப்பாக பிரதமரிடமிருந்து ஏதாவது செய்தியுடன் அவர் ராஜபக்சேவை சந்திக்கவுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.












Click it and Unblock the Notifications