உயர் கல்வி மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
டெல்லி: மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு துறையின் சார்பாக கொண்டு வர உள்ள உயர் கல்வி மசோதாவில்(2011) இருந்து சட்டக் கல்வி, வழக்கறிஞர்கள் சட்டம் ஆகியவற்றை நீக்க கோரி நாடு முழுவதும் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு துறையின் சார்பாக கொண்டு வர உள்ள உயர் கல்வி மசோதவின் மூலம் வழக்கறிஞர்களின் பணிகள் மற்றும் படிப்புகள் ஒழுங்குப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து இந்திய பார் கவுன்சில் மூலம் 2 நாள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள சுமார் 17 லட்சம் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை, அலாகாபாத், கொல்கத்தா, பெங்களூர், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் உள்ள நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பணிகள் பாதிக்கப்படவில்லை.
டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, காமன்வெல்த் போட்டி ஊழல் போன்ற வழக்குகளின் விசாரணை வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லியில் தீஸ் ஹஸாரி, ரோஹிணி, துவாரகா, சாகேத், கர்கர்டூமா, பாட்டியாலா ஆகிய 6 மாவட்ட நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன. சில நீதிமன்றங்களின் முன்பாக காலையில் கூடிய வழக்கறிஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். சில நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர்களுக்கு பதிலாக ஜூனியர்கள் ஆஜராகி, விசாரணை தேதியை மாற்றி வைக்குமாறு நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதில் மும்பையில் மட்டும் சுமார் 22 ஆயிரம் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக, மாநில பார் கவுன்சில் உறுப்பினர் சிங் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் உள்ள அஹமத் நகர், பீட், பாந்தரா, கோன்டியா, சந்திரப்பூர், புனே, துலே, ஜல்னா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை மறுதேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள இந்திய பார் கவுன்சில் அலுவலகத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய பார் கவுன்சிலின் உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான எஸ்.பிரபாகரன் கூறியதாவது,
சட்டக் கல்லூரிகள் இந்திய பார் கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் நீண்டகாலமாக இயங்கி வருகிறது. இது மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கொண்டு வர உள்ள இந்த மசோதா மூலம் நாடு முழுவதும் உள்ள 950 சட்டக் கல்லூரிகள் பாதிக்கப்படும்.
இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கும், இந்திய அரசமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அமைச்சர் கபில் சிபலிடம் இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகள் 3 முறை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும். இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் வழக்குரைஞர்கள் பங்கேற்பார்கள் என்றார்.
நாடு முழுவதும் இன்று 2வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட உள்ளனர்.












Click it and Unblock the Notifications