பாக். ராணுவ வீரர் எல்லை தாண்டி வர காரணம்... காதல் தீ?
ஜம்மு: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுறுவி வந்த 19 வயது பாகிஸ்தான் ராணுவ வீரர் இந்தியாவுக்குள் வந்தது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தான் காதலித்து வரும் பெண்ணைப் பார்ப்பதற்காகவே அவர் எல்லை தாண்டி வந்ததாக இந்தப் புதிய தகவல் கூறுகிறது.
ஆரிப் அலி என்கிற பாகிஸ்தான் ராணுவ வீரர் பூன்ச் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்தார். இதையடுத்து அவரை ராணுவம் பிடித்தது. பின்னர் ஜம்மு காஷ்மீர் போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை. சில சிம் கார்டுகளும் ஐடி கார்டும் மட்டுமே இருந்தன. அவர் பாகிஸ்தான் எல்லைப் பகுதி ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்.
பாகிஸ்தான் ராணுவத்தில் தங்களுக்கு சரியான சாப்பாடு, குடிநீர் கூட கிடைப்பதில்லை, லீவு கிடைப்பதில்லை, இதனால்தான் எல்லை தாண்டி வந்து விட்டதாக விசாரணையின்போது ஆரிப் அலி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில்தான், அவர் காதலியைப் பார்க்க எல்லை தாண்டி வந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்து வருவதாகவும், அவரைப் பார்ப்பதற்காகவே எல்லை தாண்டி வந்ததாகவும் இந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதை நமது ராணுவம் உறுதிப்படுத்தவில்லை.