புழல் சிறையில் நவீன பேக்கரி அமைக்க ஜெயலலிதா உத்தரவு
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பேக்கரி தொழில் கற்றுத் தரும் வகையிலும், சிறைத்துறைக்கு வருமானம் கிடைக்கும் வகையிலும் புழல் சிறையில் நவீன பேக்கரி அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குற்றவாளிகளை சிறையில் அடைத்து வைத்து அவர்கள் இனிமேலும் குற்றமிழைக்கா வண்ணம் தடுப்பதுடன், அவர்களை சீர்திருத்தி மீண்டும் சமுதாயத்தில் இணைந்து மறுவாழ்வு துவங்க வேண்டும். இதற்கு தேவையான பயிற்சிகளை அளிக்கும் பணியை சிறைத்துறை மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, சிறைவாசிகளின் நலனுக்கான பல சீர்திருத்த திட்டங்களையும், சிறைச் சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சென்னையில் உள்ள புழல் சிறையில் ரூ.45 லட்சம் செலவில் நவீன அடுமனை (பேக்கரி யூனிட்) அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த நவீன அடுமனை அமைக்க, இயந்திர தளவாடங்களுக்காக ரூ.30 லட்சம், உள்கட்ட மைப்பிற்காக ரூ.9 லட்சத்து 50 ஆயிரமும், மின்சார சாதனங்களுக்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், சமையலறை சாதனங்களுக்காக ரூ.1 லட்சமும், நடைமுறை மூலதனத்திற்காக ரூ.2 லட்சமும் செலவழிக்கப்படும்.
இதன் மூலம் கைதிகளால் தயாரிக்கப்படும் பல்வேறு சுவையான அடுமனை சிற்றுண்டிகள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும். இதில் கிடைக்கும் லாபத்தில் இருந்து 20 சதவீதம் சிற்றுண்டிப் பொருட்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்ட கைதிகளின் கணக்கிலும், 20 சதவீதம் அரசு கணக்கிலும், 20 சதவீதம் சிறைப் பணியாளர் நலநிதியிலும் மீதமுள்ள 40 சதவீதம் தமிழ்நாடு சிறைத்துறையின் உற்பத்தி பொருட்கள் நிதியிலும் வரவு வைக்கப்படும்.
இதற்காக தமிழ்நாடு சிறைத்துறை உற்பத்திப் பொருட்கள் நிதியம் மற்றும் தமிழ்நாடு சிறைத்துறை பணியாளர்கள் நல நிதியம் ஆகியவற்றை ஏற்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் கைதிகள் இடையே ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடும் எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, அவர்கள் சிறையிலிருந்து வெளியே செல்லும் பொழுது சுய தொழில் துவங்குவதற்கும் உதவியாகவும் அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications