அண்ணா பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நெல்லை மையம் நீக்கம்: மாணவர்கள் ஆர்பாட்டம்
நெல்லை: அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்லூரியின் நெல்லை மையம் சேர்க்கை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி நெல்லை மையத்தில் 2008ம் ஆண்டிலிருந்து மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. இங்கு இளநிலை படிப்பில் 3 பாடப்பிரிவுகளில் 180 பேரும், முதுநிலை படிப்பில் 12 பாடப்பிரிவுகளில் 240 பேரும், இளநிலை பகுதி நேர படிப்பில் 6 பாடப்பிரிவுகளில் 180 பேரும், முதுநிலை பகுதி நேர படிப்பில் 8 பாடப்பிரிவுகளில் 160 பேரும் படித்து வருகின்றனர். இங்கு பேராசிரியர்கள் 75 பேரும், அலுவலக ஊழியர்கள் 60 பேரும் உள்ளனர்.
இங்கு இந்த கல்வியாண்டில் 160 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஆயத்தமாக இருந்தனர். இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதற்கிடையே நெல்லை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்பக்கல்லூரி மையம் மட்டும் சேர்க்கை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி, குமரி மாவட்டங்களிலுள்ள மையங்களில் சேர்க்கை நடந்து வருகிறது. இதனால் நெல்லை மையத்தைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை கண்டித்து பாளையங்கோட்டை புது பேருந்து நிலையம் அருகேயுள்ள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மையத்தில் நேற்று மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.