குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகியவற்றை புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19-ந் தேதியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 7-ந் தேதியும் நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.ஏ.சங்மாவும் களத்தில் உள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியும் ஜஸ்வந்த்சிங்கும் மோதுகின்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கவில்லை. அப்துல்கலாமை முன்னிறுத்தப் பார்த்தது. முயற்சி கைகூடவில்லை. அதேபோல் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்தப் பார்த்தது. அதுவும் நடைபெறவில்லை.
இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அக்கட்சி அறிவிக்காமல் இருந்து வந்தது. மேலும் வாக்குப் பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு அறிவிப்பதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகியவற்றைப் புறக்கணிப்பதாக அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications