இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...!

தமிழக மீனவர்களைப் போல ஒரு சோகமான மக்கள் கூட்டம் வேறு இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. இலங்கைக் கடற்படைக் காடையர்களிடம் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழக மீனவர்கள் உயிரிழந்து விட்டனர். இதுவரை ஒருமுறை கூட இதற்கு இந்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான மீனவர்கள் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இதற்கும் ஒரு நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
தினசரி இலங்கைக் கடற்படைக் காலிக் கும்பலிடம் சிக்கி இன்னலுற்று வருகிறார்கள் தமிழக மீனவர்கள். இதற்கு இந்திய அரசு இதுவரை எந்தவிதமான கடுமையான நிலைப்பாட்டையும் எடுத்ததில்லை. ஏதோ, தமிழகம் அண்டார்டிகாவில் இருப்பது போல அது நடந்து வருகிறது. தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எது நடந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்பட டெல்லியில் யாருமே இல்லை என்பதே கசப்பான உண்மை.
இலங்கைக்காரர்கள் ராமேஸ்வரத்திற்கும், நாகைக்கும் படையெடுத்து வந்து தாக்கினாலும் கூட மத்திய அரசு இப்படித்தான் அமைதியாக இருக்குமோ என்று அஞ்சும் அளவுக்கு நிலைமை கேவலமாக உள்ளது.
இது இப்படி என்றால் சில மாதங்களுக்கு முன்பு கேரள கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை இத்தாலி படையினர் நாயைச் சுடுவது போல சுட்டு விட்டு ஓடினர். ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் மத்திய அரசும் சரி, கேரள அரசும் சரி படு வேகமாக செயல்பட்டு அந்த இத்தாலியர்களை சிறை பிடித்தன. ஒருவேளை சுடப்பட்டவர்கள் மலையாளிகள் என நினைத்து அவசரப்பட்டு விட்டனரோ என்னவோ தெரியவில்லை.
இப்போது சம்பந்தமே இல்லாமல், துபாயில் வைத்து அமெரிக்க் கடற்படையினர் கையால் உயிரிழை இழந்துள்ளார் ஒரு தமி்ழ்நாட்டுத் தமிழர். மீன் பிடிக்கப் போன அவரை குருவி சுடுவது போல சுட்டு விட்டு, படு சாதாரணமான முறையில் இந்த விவகாரம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.
இந்திய அரசும் இந்த சம்பவத்தில் படு கவனமாக பேசி வருகிறது. வன்மையாக கண்டிக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட இந்திய அரசின் வாயிலிருந்து வரவில்லை. கண்டனத்துக்குரியது என்று சொல்லத் தோன்றவில்லை. எதிர்க்கத் தோன்றவில்லை. ஒருவேளை இதுவே ஒரு மலையாளி மீனவராகவோ அல்லது குஜராத்தி மீனவராகவோ அல்லது வங்காலி மீனவராகவோ இருந்திருந்தால் நிச்சயம் இந்தியாவின் குரல் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
அது சரி, பக்கத்து சுண்டைக்காய் நாடான இலங்கையின் செயலையே கண்டிக்காத இந்திய அரசு, அமெரிக்காவையா கண்டிக்கப் போகிறது. இன்னும் எத்தனை தமிழர்களின் உயிரை சர்வதேச தோட்டாக்கள் பறிக்கப் போகிறதோ...!












Click it and Unblock the Notifications