அமெரிக்க கடற்படையினர் எச்சரிக்கவேயில்லை, திடீர் என்று சுட்டனர்: தமிழக மீனவர்
துபாய்: துபாய் கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் படகின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அமெரிக்க கடற்படையினர் எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாயில் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கடலில் மீன் பிடிக்கையில் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்துகண்ணன், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
துபாய் நிறுவனத்திற்காக ஒரு படகில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் படகு அமெரிக்க கடற்படையின் கப்பலை நோக்கிச் சென்றதால் அது தீவிரவாதிகளின் படகாக இருக்குமோ என்று நினைத்து அமெரிக்க மாலுமிகள் அதை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். அவ்வாறு சுடுவதற்கு முன்பு தாங்கள் பலமுறை எச்சரித்ததாகவும், அதையும் தாண்டி அந்த படகு தங்கள் கப்பலை நோக்கி வந்ததால் தான் சுட்டதாகவும் அமெரி்கக மாலுமிகள் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் எந்தவித எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும், அமெரி்க்க கடற்படை கப்பலை சுற்றிச் செல்ல முயன்றபோது தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் இந்த சம்பவத்தில் காலில் குண்டு பாய்ந்து துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்து முனிராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
அமெரிக்க மாலுமிகள் எங்களை எச்சரிக்கவில்லை. எச்சரிக்கை ஒலி எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் அவ்வாறு எந்த ஒலியும் எழுப்பவில்லை. திடீர் என்று அவர்கள் சுடத் தொடங்கினர். அதில் என் நண்பன் குண்டு பாய்ந்து இறந்தான். அந்த நிமிடம் என்ன நடந்தது என்றே எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications