சவூதியில் இறந்த கணவரின் உடலை தமிழகம் கொண்டு வரப் போராடும் பெண்
விழுப்புரம்: சவுதி அரேபியாவில் இறந்து போன தனது கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி பெண் ஒருவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் மாதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி என்பவர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கணவர் பெரியநாயகம்(32) கடந்த ஏப்ரல் 16ம் தேதி வேலைக்காக சவூதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு தமாம் பகுதியில் முபாரஸ் என்ற இடத்தில் ரித்தேஜ் பேக்கரி என்ற கடையில் டிரைவராக வேலை செய்தார்.
கடந்த 15ம் தேதி எனது கணவரின் சம்பள பணத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டு அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் அவருடன் வேலை செய்து வரும் யோவான்ராஜ் மற்றும் அந்தோணி குரூஸ் ஆகியோர் கடந்த 17ம் தேதி எங்களது செல்போனுக்குத் தொடர்பு கொண்டு எனது கணவர் திடீரென இறந்துவிட்டதாகக் கூறினர்.
இத்தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த நாங்கள் பெரியநாயகத்தின் உடலை நான்கு நாட்களாக எதிர்பார்த்தும் இதுவரை வரவில்லை. எனவே, சவூதியில் இறந்த எனது கணவர் பெரியநாயகத்தின் உடலை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பெரியநாயகம், அருள்ஜோதி தம்பதிக்கு நான்சி( 4) மற்றும் பிரின்சி என்ற எட்டு மாத குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்ககது.