சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை வலுப்படுத்த ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கை
சென்னை: திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை சென்னையில் உள்ள அண்ணா பலக்லைக்கழகத்துடன் இணைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை வலுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மனித வளத்தினை பெருக்க கல்வி மிகவும் அவசியம் ஆகும். தமிழக மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் எடுத்து வருகிறது.
தொழில்நுட்ப கல்விக்கு உரிய முக்கியத்துவத்துவம் கொடுப்பதற்காக, தொழில்நுட்ப கல்விக்கென தனியாக பல்கலைக்கழகம் ஒன்று மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் சென்னையில் 4-9-1978 அன்று தொடங்கப்பட்டது. 2001ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில், சுயநிதி கல்லூரிகள் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளின் செயல்பாட்டினை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்துதல் மற்றும் தொடர் கண்காணிப்பை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக 237 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு கல்லூரிகளாகக் இணைக்கப்பட்டன.
அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்படும் பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களுக்கு உலக அளவில் நல்ல அங்கீகாரம் கிடைத்து வருகிறது. 2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தினை பிரித்து சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய 5 இடங்களில் புதியதாக அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
அதிக எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்கள் தொடங்கினால் மட்டும் கல்வியின் தரத்தில் எந்தவிதமான உயர்வும் ஏற்படாது. ஆனால் ஒரே பல்கலைக்கழகமாக இருந்தாலும், உயர்தரமான கல்வி வழங்கும் பல்கலைக்கழகத்தால் மட்டுமே மாணவர்களுக்கு நல்ல கல்வி அளித்து, சிறப்பான எதிர்காலத்தினை உருவாக்கித் தர இயலும். எனவே ஒன்றாக இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தினை பிரித்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை தொடங்கியதால், அப்பல்கலைக்கழகம் தனது வலிமையை இழந்துவிட்டது.
இதனால் கல்விச் சேவையில் தரம் உயராமல், சுயமாக செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 2011ம் ஆண்டு பதவியேற்றவுடன் முடிவெடுத்தது.
இதற்கான சட்டம், சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு சிறந்த முறையில் நடைபெற வேண்டும் என்பதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா பால கிருஷ்ணன் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு இந்த ஐந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அசையும், அசையா சொத்துக்கள் குறித்து தீர ஆராய்ந்து அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தது.
இக்குழுவின் அறிக்கையை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை, சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைக்க உத்தரவிட்டுள்ளார். இவற்றினை ஒருங்கிணைக்க இயற்றப்பட்ட தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம் மற்றும் நீக்கம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 20/2011) 1.8.2012 முதல் நடைமுறைக்கு கொண்டு வரு வதற்கும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இச்சட்டத்தின் மூலம் கோயம்புத்தூர், திருநெல்வேலி, சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய ஐந்து இடங்களிலுள்ள 535 பொறியியல் கல்லூரிகள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுப் பெற்ற பொறியியல் கல்லூரிகளாக மாற்றப்படும். இதேபோன்று திருச்சி, திருநெல்வேலி, சென்னை மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களிலுள்ள 12 உறுப்பமைக்கல்லூரிகளும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பமைக் கல்லூரிகளாக இயங்கும்.
மேலும் நிர்வாக வசதிக்காக திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்கள் அமைக்கப்படும். இந்த அலுவலகங்கள், உறுப்பமை மற்றும் இணைவு கல்லூரிகளின் செயல்பாட்டினை மேற்பார்வையிடும். மேலும் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குறைகளை களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்.
திருச்சிராப்பள்ளி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின், பல்கலை துறைகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பமை கல்லூரியாக மாற்றி அமைக்கப்படும். அங்கு பயிலும் மாணவர்கள் மேற் கண்ட உறுப்பமை கல்லூரியிலேயே தங்களது கல்வியினை தொடர்வார்கள்.
இதேபோன்று, சென்னை அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் பல்கலை துறைகள், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும். இங்கு பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியினை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொடர்வார்கள்.
ஏனைய அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பல்கலை துறைகளில் பயின்றுவரும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள மண்டல அலுவலகங்களில் தங்களது கல்வியினை தொடர்வார்கள்.
2011-12-ம் ஆண்டுக்கு முன்பு 5 அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு நவம்பர்-டிசம்பர் 2011 பருவத்திற்கான தேர்வுகள் அந்தந்த பல்கலைக்கழகங்களால் நடத்தப்பட்டன.
தற்போது ஜனவரி 2012 மற்றும் மே 2012ல் அனைத்து தேர்வுகளும், அனைத்து மாணவர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தாலேயே நடத்தப்பட்டது. இனி வருங்காலத்தில் அனைத்துத் தேர்வுகளும் 17 பிராந்திய அலுவலகங்கள் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்.
இதன் மூலம் உலக அளவில் பெருமைப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் இழந்த பெருமையையும், பாரம்பரியமிக்க புகழையும் மீண்டும் பெறும். அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்படுவதால் தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தினை பயின்று, அவர்கள் உலகளவில் ஆராய்ச்சி போன்ற மேல்நிலைப் படிப்புகளில் அதிக அளவில் பங்கேற்க வழிவகை ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications