சரக்கு விற்பனையில் தில்லுமுல்லு- கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பணியாளர்
சென்னை: அரசின் மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ததால் மொத்தம் 384 ஊழியரக்ள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசின் மதுபானக் கடைகளான டாஸ்மாக்கில் ரூ20 வரை கூடுதல் விலைக்கு சரக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. குடிமகன்களும் கண்டுகொள்ளாமல் வாங்குகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் டாஸ்மாக் மூலம் ரூ18 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் மொத்தம் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களும் பணிபுரிகின்றனர். ஆனால் பணியாளர்களுக்கு எந்தவித விதிகளும் கட்டுப்பாடும் இல்லை.
தங்களுக்கு உரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. மேலும் உயர் அதிகாரிகளுக்கும் மாதந்தோறும் கப்பம் கட்ட வேண்டிய நிலையும் இருகிறது. இதனால் கூடுதல் விலைக்கு விற்க நேரிடுகிறது என்கின்றனர் பணியாளர்கள்.
மேலும் கேரளாவைப் போல் மதுபானக் கடை ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கி ரசீது முறையை பின்பற்றினால் அனைத்து முறைகேடுகளும் தடுக்கப்பட்டுவிடும் என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.
இதேபோல் டாஸ்மாக்கின் மாமூல் வாங்கும் உயர் அதிகாரிகள் மற்றும் பார் உரிமையாளர்களால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதையும் கட்டுப்படுத்தவும் கோருகின்றனர்.
இதை நிராகரிக்கும் அரசுத் தரப்பு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் இவ்வளவுதான் என்பதை ஒப்புக்கொண்டுதான் அவர்கள் பணியில் சேர்ந்தனர். ஊதியம் குறைவு என்பதைக் காரணம் காட்டி அதிக விலைக்கு விற்பது சரியல்ல. அவர்கள் முறையாகக் கோரிக்கைகள் வைத்தால் அது முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்கிறது.
மேலும் டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்கவும் எலக்ட்ரானிக் ரசீது முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மது வாங்க வரும் அனைவருக்கும் ரசீது வழங்கப்பட்டு பாட்டில் லேபிள்களில் அச்சடிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கே விற்பனை செய்யப்படும் என்று உறுதியளித்திருக்கிறார் டாஸ்மாக் மேலாளர் சவுண்டையா.












Click it and Unblock the Notifications