சிவகிரி ஜமீன் சொத்து விவகாரம்: வழக்கு தொடர்ந்தவருக்கு 3 மாத சிறை, வக்கீலுக்கு ரூ.50,000 அபராதம்
சென்னை: சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜெகந்நாதனுக்கு 3 மாத சிறையும், அவரது வழக்கறிஞருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிவகிரி ஜமீன் தெட்சிணபிரசாத்திடம் வேலை பார்த்தவர் என்.ஜெகந்நாதன். ஜமீனின் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தெட்சிணாபிரசாத் தனக்கு உயிலாக எழுதிக் கொடுத்திருப்பதாகக் கூறி கடந்த 2004ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு சொத்துக்களை நிர்வகிக்க அதிகாரக் கடிதத்தை அளித்தது.
சிவகிரி ஜமீனுக்கு தமிழகத்தில் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து வங்கியிலும் பணம் இருப்பதாகக் கூறப்பட்டது. அந்த பணத்தை மீட்கும் அதிகாரத்தை ஜெகந்நாதன் கேசினோ என்ற வெளிநாட்டவருக்கு கொடுத்தார். கடந்த 2008ம் ஆண்டு இது குறித்து அறிந்த சிவகிரி ஜமீன் வாரிசுகளான பாலகுமாரி நாச்சியார், பத்மினி ராணி, எஸ்.கே.ஜெகந்நாதன், செல்வராஜ் ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜெகந்நாதனுக்கு கொடுத்த உரிமையை ரத்து செய்தது. மேலும் தாங்கள் வழங்கிய கடிதத்தை ஒப்படைக்கவும் ஜெகந்நாதனுக்கு உத்தரவிட்டது. ஆனால் அவரோ கடித்தத்தை ஒப்படைக்காமல் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இதையடுத்து அவர் மீதும், அவரது வழக்கறிஞர் சொக்கலிங்கம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகிரி ஜமீன் வாரிசுகளின் வழக்கறிஞர்கள் குப்தாரவி, சதீஷ் பராசரன், அரசு வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் ஜெகந்நாதனிடம் குறுக்கு விசாரணை செய்தனர். இன்றுடன் விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
சிவகிரி ஜமீன் சொத்து நிர்வகிப்பது தொடர்பாக 2004ம் ஆண்டு வழங்கப்பட்ட கடிதத்தை என்.ஜெகந்நாதன் இந்த நீதிமன்றத்தில் திரும்ப ஒப்படைக்காமல் தவறான தகவல்களை கூறியுள்ளார். வழக்கை திசை திருப்பும் முயற்சியாக அவர் பொய் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஜெகந்நாதன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொக்கலிங்கம் தவறான பாதைக்கு வழிகாட்டியுள்ளார். தொழில் தர்மத்தை மீறி உள்ளார். எனவே அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்ட தவறினால் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
கடிதத்தை திரும்ப ஒப்படைக்காத என்.ஜெகந்நாதனுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஜெகந்நாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications