உதயகுமாருக்கு எதிரான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த போலீசாருக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமாருக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கையில் போலீஸ் விசாரணையில் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் டி. ரங்கநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான பணி 1988ம் ஆண்டு தொடங்கியது. இப்போது இந்த அணுமின் நிலையம் செயல்பட்டால் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுவோம் என்ற கற்பனையான பயத்தை முன்வைத்து உதயகுமார் தலைமையில் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு, போராடி வருகின்றனர். ரூ.14,000 கோடி செலவில் இந்த அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை நிறுத்தி வைத்தால் இந்திய பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் உதயகுமார் மீது போலீசில் கூடங்குளம் வி.ஏ.ஓ. புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கூடங்குளம் போலீசார் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதே போன்று பொதுநல மனுவை முன்னாள் எம்.எல்.ஏ. விஜயராகவனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.துரைசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது,
இந்த 2 மனுக்களையும் பொதுநல மனுக்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. போலீசார் நடத்தி வரும் ஒரு வழக்கின் விசாரணை நிலுவையில் இருக்கும்போது, இதுபோன்ற வழக்குகளை ஊக்குவிக்க முடியாது. அதேபோல கூடங்குளம் பகுதியில் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கையை பராமரிப்பது போலீசாரின் கடமையாகும். ஒரு வழக்கை போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும்போது அதில் எந்த ஒரு தனி நபரோ, நீதிமன்றமோ தலையிட முடியாது.
இந்த சூழ்நிலையில் வழக்கின் புலன் விசாரணையை சட்டத்தின்படி எவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும். இந்த 2 மனுக்களையும் முடித்து வைத்து உத்தரவிடுகிறோம் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications