பள்ளி விடுதியில் இறந்த மாணவனின் சாவில் மர்மம்-உறவினர்கள் முற்றுகை போராட்டம்
சேலம்: சேலத்தில் பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவன் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த மாணவனின் கால் விரல் மற்றும் 2 பற்கள் உடைந்துள்ளதால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக, உறவினர் பள்ளியின் முன் முற்றிக்கை போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த மணிவிழுந்தான் கிராமத்தில் மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு உள்ள மாணவர் விடுதியில் தங்கி +2 படித்து வந்தவர் அணில்குமார்(17). இவரது தந்தை தேவராஜன், நெய்வேலி அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் உணவகம் நடத்தி வருகிறார். இவர் பாமகவின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளி விடுதியில் உள்ள மின் விசிறியில் அணில்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்த பள்ளி நிர்வாகிகள், நெய்வேலியில் இருந்து அணில்குமாரின் பெற்றோர் வரும் முன் உடலை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அணில்குமாரின் பெற்றோர், சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த பாமக பிரமுகர்களுடன் சேர்ந்து, அணில்குமார் தற்கொலை செய்த பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவியதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையடுத்து ஆத்தூர் வட்டாசியர் தங்கராசு, கோட்டாசியர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, பள்ளியின் முன் கூடியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பள்ளியின் முன் கூடியிருந்த மாணவனின் உறவினர், அணில்குமாரின் வாயில் 2 பற்கள் உடைந்துள்ளது. கால் பெருவிரல் உடைந்துள்ளது.
தற்கொலை செய்து கொள்ளும் போது, இறந்த நபரின் ஆசனவாயில் மலம் வெளியேறும், அல்லது பிறப்புறுப்பில் விந்து வெளியேறும். ஆனால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அணில் குமாருக்கு இதில் எதுவுமே நடக்கவில்லை.
எனவே மாணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அணில் குமாரின் சாவு குறித்த விசாரணை முடியாமல், பிரேத பரிசோதனை செய்ய ஒத்து கொள்ளமாட்டோம் என்றனர்.
இதையடுத்து தடய அறிவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்திய பிறகு, பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. எனவே பிரேத பரிசோதனைக்கு பிறகே, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெளிவான தெரியும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications