எஸ் 11 பெட்டியில் பயணித்தவர்கள் மொத்தம் 89 பேர்-சென்னையைச் சேர்ந்தவர்கள் 22 பேர்
நெல்லூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீவிபத்துக்குள்ளானது. இதில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. தீவிபத்து ஏற்பட்ட எஸ் 11 பெட்டியில் பயணித்த பயணிகள் பட்டியல் குறித்த விவரத்தை இதுவரை ரயில்வே வெளியிடாமல் இருந்தது. தற்போது அந்தப் பெட்டியில் பயணித்தோர் எவ்வளவு பேர் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
இப்பெட்டியில் பயணித்தவர்களில் பலர் தத்கல் மூலம் டிக்கெட் வாங்கிப் பயணித்துள்ளார்கள். இதனால்தான் யார் யார் பயணித்தார்கள் என்ற விவரம் முழுமையாக கிடைக்கவில்லை. ஆனால் பெட்டியில் எத்தனை பேர் பயணித்தனர் என்ற விவரம் கிடைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெட்டியில் மொத்தம் 89 பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 22 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். விஜயவாடா ரயில் நிலையத்தில் 28 பேர் ஏறியுள்ளனர். 17 பேர் டெல்லியிலிருந்து வந்துள்ளனர். போபால், வாரங்கல்லில் தலா 11 பேர் ஏறியுள்ளனர்.
இதுவரை உயிரிழந்துள்ள 50 பேரில் ஒருவர் கூட யார் என்ற அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் அவர்களில் பலர் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிப் போய் விட்டனர்.
தற்போது சென்னையிலிருந்து நெல்லூர் சென்றுள்ள சிறப்பு ரயிலில் அழைத்து வரப்பட்டுள்ள உறவினர்களை, உடல்களை அடையாளம் காட்டுதவற்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் பார்த்து அடையாளம் சொன்ன பிறகுதான் இறந்தவர்கள் யார் என்ற விவரம் தெரிய வரக் கூடும்.
தமிழக அரசு சார்பில் யாரும் போகவில்லை
இதற்கிடையே, தமிழக அரசு சார்பில் ஒரு அமைச்சர் கூட இதுவரை நெல்லூருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மேலும் இதுவரை தமிழக முதல்வரிடமிருந்து இரங்கல் செய்தி எதுவும் வெளியாகவில்லை.