முத்துமாரியம்மனின் மூக்குத்தி, தாலி, தோடு அபேஸ்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட நகைகளை திருடர்கள் திருடிச் சென்றதால் கிராமமே பரபரப்பாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த வயலோகம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குப் பக்தர்கள் காணிக்கையாக, நன்கொடையாக வழங்கிய பணத்தின் மூலம் அம்மனுக்கு வைரக்கல் பதிக்கப்பட்ட 5 பவுன் டாலர் செயின், 3 பவுன் தாலிச் செயின், தோடு, பொட்டு, மூக்குத்தி போன்றவை வாங்கப்பட்டுள்ளது.
திருவிழா, பெளர்ணமி விழா மற்றும் ஆடி வெள்ளி போன்ற முக்கிய நாட்களில் அம்மனுக்கு அணிவிப்பது வழக்கம். கடந்த 3ம் தேதி ஆடி வெள்ளி என்பதால் அம்மனுக்கு நகைகள் அனைத்தும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இரவு எட்டு மணிக்கு மேல் நடையை சாத்திவிட்டு கோவில் குருக்கள் வீடு திரும்பியுள்ளார்.
கோவில் வெளியே காவலாளி கருப்பையா வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து விழித்த கருப்பையா, திருடன் திருடன் என்று கத்தியுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது கருவறை பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து உள்ளே போய்ப் பார்த்தனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த செயின், தாலிச் சங்கிலி, தோடு, பொட்டு, மூக்குத்தி ஆகியவை திருடு போயிருந்தன.
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அம்மனின் தாலி, மூக்குத்தி உள்ளிட்டவை திருடு போனதால் வயலோகம் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.