ஐகோர்ட்டில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 3 நீதிபதிகளை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

அவரது அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகள் பணியிடங்களில் 8 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் இரு நீதிபதிகள் விரைவில் ஓய்வு பெற இருப்பதால், அதனால் ஏற்படும் காலி இடங்களையும் சேர்த்து நிரப்புவதற்காக தகுதியுடைய 10 பேரின் பட்டியல் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வன்னியர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 20 இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே வன்னியர் ஆவார். தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு ஆதரவான வழக்குறைஞர்கள் மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது.
நீதிபதிகள் நியமனத்தில் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இதற்கு வசதியாக நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை தேர்வு செய்யும்போது வன்னிய சமுதாயத்தை சேர்ந்த 3 பேருக்காவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.











Click it and Unblock the Notifications