வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்தில் கனமழை பெய்யும்

தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி ஆடி வரும் நிலையில் ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு இடையே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆந்திராவிலும், தமிழகத்தின் வட பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா கடல் பகுதியில் இருந்து ஆந்திராவின் தென் பகுதி வரை காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதனால் ஆந்திராவிலும், தமிழக கடலோரப் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யலாம். சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை வேளை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாவிட்டாலும் வடமாநிலங்களான ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நிலச்சரிவும் ஏற்பட்டதில் வீடுகள் இடிந்து விழுந்தன. வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர் 50 பேரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நேற்று காலை 8.30 மணிப்படி தமிழகத்தில் செங்கல்பட்டில் 3 செ.மீ. மழையும், சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 2 செ.மீட்டரும், காஞ்சிபுரம், மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், பென்னாகரத்தில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications