தமிழக ஹஜ் பயணிகளுக்கான கோட்டா அதிகரிப்பு- ஜெயலலிதாவுக்கு ஹஜ் கமிட்டி நன்றி
சென்னை: தமிழக ஹஜ் பயணிகளுக்கான கோட்டாவை அதிகரிக்க கோரி தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனை ஏற்று தமிழக ஹஜ் பயணிகளுக்கு 811 இடங்களை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அகில இந்திய ஹஜ் கமிட்டி நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை பிரசிடெண்ட் ஹோட்டலில் தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹஜ் கமிட்டியின் செயல் அதிகாரி கே.அலாவுதீன், நிர்வாக அதிகாரி சையது ஹாசீம், கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் தமிழக ஹஜ் பயணிகளுக்கான கோட்டாவில் 811 இடங்களை மத்திய அரசு அதிகரிக்க, கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து அகில இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபக்கர் கூறியதாவது,
தமிழக ஹஜ் பயணிகளுக்கு மொத்தம் 2,863 இடம் மட்டுமே இருந்தது. ஆனால் தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஹஜ் பயணம் செல்ல கூடுதல் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு கூடுதலாக 811 இடங்களை அளித்துள்ளது. மேலும் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சு காய்ச்ச 3,750 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எனவே முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
ஜெயலலிதா பங்கேற்கும் இப்தார் நிகழ்ச்சி:
இதற்கிடையே அதிமுக சார்பில் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ள்கிறார்.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று மாலை 6 மணியளவில், நந்தம்பாக்கம், மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications