வழக்கு.. சிறை.. எதற்கும் அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த்
கிருஷ்ணகிரி: ஆட்சியில் உள்ள குறைகளை கூறினால் என் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. ஆனால் வழக்கு, சிறை எதற்கும் நான் அஞ்சமாட்டேன் என்று பேசியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கிருஷ்ணகிரியில் தேமுதிக நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் கனிம வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் கனிம வளங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் கிரானைட் கல்கள் அதிகளவில் வெட்டியெடுக்கப்படுகின்றன.
இதில் முறைகேடுகளை தடுப்பதாகக் கூறி, அதிகாரிகள் நடத்தும் ஆய்வு பெயரளவுக்குதான் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்க்கரை ஆலை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை தொடங்கப்படவில்லை.
ஒசூர் பகுதியில் மின்வெட்டால் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மின்வெட்டால் தொழிலாளிகள், ஆலை முதலாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளில் மின் தடையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தொலைநோக்கு திட்டத்தால் 2023-ல் தமிழகம் முன்னேறும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், தற்போது குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. சாலைகள் மிகவும் சீர்கெட்டுள்ளது.
ஆட்சியில் உள்ள குறைகளை கூறினால் என் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. வழக்கு, சிறை எதற்கும் நான் அஞ்சமாட்டேன் என்றார் விஜயகாந்த். கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த்தும் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications