உஷ்.... கல்பாக்கம், ராமகுண்டம் மின் நிலையங்களில் கோளாறாம்.. தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிப்பு
கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு 330 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரம் தடைபட்டுள்ளது. அந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய 2 நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திராவில் உள்ள ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு 20 முதல் 25 சதவீதம் மின்சாரம் கிடைக்கும். தற்போது அங்கும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் அந்த மின்சாரமும் தடைபட்டுள்ளது. இதனால் ஏற்கனவே அமலில் உள்ள மின்தடை நேரம் மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக கோவையில் தினமும் 4 முதல் 5 மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது. இரவு, பகல் என்று இல்லாமல் மின்தடை ஏற்படுகிறது. இது தவிர தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் நீர் மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கிடையே ஆடி மாதத்தில் காற்றாலைகளில் இருந்து ஓரளவு மின்சாரம் கிடைத்தது. தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. இதனால் தான் மின்தடை நேரம் அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.