தற்கொலைக்கு முயன்ற அக்காவின் திருமணம் நின்றது-அவமானம் தாங்காமல் தம்பி தற்கொலை!
நெல்லை: நெல்லையில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி தற்கொலை முயன்ற மணப்பெண்ணின் திருமணம் நிறுத்தப்பட்டது. இதில் அவமானம் தாங்க முடியாமல் மணப்பெண்ணின் தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் நாங்குனேரியை அடுத்த கல்லத்தியை சேர்ந்தவர் அன்பு பூங்கனி(27). இவருக்கும், சிவந்தியாபுரத்தை சேர்ந்த வேலாண்டி என்பவருக்கும், கடந்த 22ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அன்பு பூங்கனியின் தந்தை வெள்ளத்துரை இறந்துவிட்டால், அவரது தம்பி மாரியப்பனும்(25), தாய் மாமா துர்க்கை முத்துவும் சேர்ந்து, திருமண அழைப்பிதழ்களை கொடுத்தனர்.
கடந்த 22ம் தேதி அதிகாலையில் திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணை அழைத்து செல்ல வந்தனர். அப்போது மணப்பெண் பூங்கனி, மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி, அளவுக்கதிமான தூக்கு மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள், மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணம் நின்றதால், திருமணத்திற்காக செலவு செய்த பணத்தை, பெண் வீட்டாரிடம் கேட்டனர். இதையும் அன்பு பூங்கனியின் வீட்டார் கொடுத்தனர்.
இந்த நிலையில் அக்காளின் திருமணம் நின்றதால், அவமானம் அடைந்த தம்பி மாரியப்பன், விஷம் குடித்துவிட்டு ஊருக்கு வெளியே உள்ள தோட்டத்தில் சென்று படுத்து கொண்டார். அன்பு பூங்கனி மருத்துவமனையில் சிகிச்சைக்கான சேர்க்கப்பட்டதால், மாரியப்பனை யாரும் கவனிக்கவில்லை. அப்போது மாரியப்பனை பார்க்க வேண்டும் என்று பூங்கனி கூறியுள்ளார்.
மாரியப்பனை தேடி சென்ற போது, விஷம் குடித்து தோட்டத்தில் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்ட உறவினர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.