மதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்...சென்னை அப்பல்லோவில் சேர்ப்பு- கொடைக்கானலில் நடந்தது என்ன?
நித்தியானந்தாவை தனது இளைய ஆதீனமாக நியமித்தது முதலே மதுரை ஆதீனம் நிம்மதியைத் தொலைத்து விட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள. அவர் ஏதோ ஒருவித நிர்ப்பந்தத்தின் கீழ் இருப்பதாகவும், நெருக்கடியில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சமீப காலமாக ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு கூட 2 நித்தியானந்தா ஆட்களை மடத்தை விட்டு வெளியேற்றினார் ஆதீனம்.
இந்த நிலையில், சமீபத்தில் நித்தியானந்தா வலியுறுத்தி கூப்பிட்டதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்குப் புறப்பட்டுப் போனார் ஆதீனம். போய் விட்டு வந்த அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாம். வந்தது முதலே மனக்குழப்பத்தில் இருந்து வந்தாராம் ஆதீனம். சரியாக சாப்பிடவில்லையாம். எனவே கொடைக்கானலில் அவரைப் பாதிக்கும் வகையில் ஏதோ நடந்திருக்கிறது. அதனால்தான் அவர் அதிர்ச்சியிலும், மன வேதனையிலும் இருந்திருக்கிறார் என்று அவருக்கு வேண்டப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் வாக்கில் ஆதீனத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மோசமடைந்துள்ளது. இதையடுத்து டாக்டர்களை வரவழைத்து மடத்தில் வைத்தே சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் மேல் சிகிச்சைக்கு சென்னை கொண்டு செல்ல பின்னர் தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு அவரை விமானம் மூல்ம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.