வேலூர், ஆந்திரா, ஓசூர் வழியாக பெங்களூரில் தஞ்சமடைந்த ஷானாஸ்!

கேரளாவைச் சேர்ந்த 32 வயதுப் பெண்ணான ஷானாஸ் 50 பேரை மணந்து மோசடி செய்து விட்டதாக தகவல்கள் வெளியானபோது நாடே அதிர்ந்தது. இங்கிலாந்தின் டெய்லி மெயில் வரை செய்திகள் போய் விட்டன. அந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தி விட்டது ஷானாஸ் விவகாரம்.
இந்த நிலையில் அவரை சென்னை போலீஸார் பெங்களூரில் வைத்து மடக்கிப் பிடித்துக் கொண்டு வந்துள்ளனர்.
சிக்கியது எப்படி...
ஷானாஸ் கடைசியாக புளியந்தோப்பு பிரசன்னாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களது தாம்பத்திய வாழ்க்கை 3 மாதங்கள் வரை நீடித்துள்ளது. அதன் பின்னர் சமீபத்தில் வேலூர் போவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறினார் ஷானாஸ். ஆனால் வரவில்லை.இதையடுத்தே போலீஸை அணுகினார் பிரசன்னா.
இந்த நிலையில்தான் போலீஸாருக்குப் பெருமளவில் புகார்கள் வர ஆரம்பித்தன. அப்போது தனது மனைவிக்கு பிரியா என்ற நெருக்கமான தோழி வேலூரில் இருப்பதாக பிரசன்னா போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து பிரியாவை அணுகினர் போலீஸார். அப்போது ஷானாஸ் அங்கு வந்து சென்றதை தெரிவித்துள்ளார் பிரியா. இதையடுத்து பிரியா மூலம் ஷானாஸைப் பிடிக்க போலீஸார் வலைவிரித்தனர். தொடர்ந்து செல்போன் மூலம் ஷானாஸுடன், பிரியாவை பேச வைத்தனர்.
அப்போது ஆந்திரா, ஓசூர் ஆகிய இடங்களுக்கு ஷானாஸ் சென்றது தெரிய வந்தது. நேற்று அவர் பெங்களூரில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை துல்லியமாக ஆராய்ந்தனர் தனிப்படை போலீஸார்.
அப்போது அவர் நேற்று இரவு பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையப் பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீஸார் மெஜஸ்டிக் பேருந்து நிலையப் பகுதியை முற்றுகையிட்டு தீவிர வேட்டை நடத்தினர். செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்த அவர்கள் அங்கு நின்றிருந்த ஷானாஸை மடக்கிப் பிடித்தனர்.
ஷானாஸின் தோழி பிரியாதான், ஷானாஸ் பிடிபட வெகுவாக உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications