திருப்பூரில் விசாரணைக் கைதி மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி மர்மமான முறையில் இறந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நிதிநிறுவன அதிபர் பழனிச்சாமியின் கொலை வழக்கு குறித்து விசாரிக்க திருப்பூர் போலீசார் வியாபாரி மோகன்ராஜ் என்பவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விசாரணைக்கு சென்ற இடத்தில் அவர் மர்மமான முறையில் இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், பொதுமக்களும் அவரை போலீசார் அடித்தேக் கொன்றுவிட்டனர் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு எஸ்.பி., திருப்பூர் எஸ்.பி.(பொறுப்பு) பொன்னி ஆகியோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதல் எஸ்.பி. சக்ரவர்த்தி, திருப்பூர் வடக்கு இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மோகன்ராஜின் உறவினர்கள் கோரிக்கை விடு்த்தனர்.

மோகன்ராஜின் சாவு விவகாரத்தை நீதிபதி விசாரித்து வருவதால் நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பொன்னி கூறியதை அவர்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் திருப்பூர் எஸ்.பி.யாக இன்று பதவியேற்க வந்த அமீத்குமார் சிங் மறியலில் ஈடுபட்ட மோகன்ராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

மோகன்ராஜின் சாவு குறித்த விசாரணை நீதித்துறையின் கீழ் உள்ளதால் இது குறித்து திருப்பூர் போலீஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. இருப்பினும் இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள். தற்போது இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நீங்கள் விரும்பினால் மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

இது குறித்து மோகன்ராஜின் மனைவி கூறுகையில்,

நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டு உரிமையாளர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே நாங்கள் அந்த வீட்டை காலி செய்துவிட்டோம். இந்நிலையில் கடந்த வெள்ளி்க்கிழமை போலீசார் வந்து எனது கணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 2 நாட்களாக அவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அதில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அவர் விசாரணையின்போது மயங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

எனது கணவர் ஒரு அப்பாவி. அவரைப் போய் கொல்ல எப்படி தான் அவர்களுக்கு மனம் வந்ததோ என்று தெரியவில்லை. என்னையும், எனது குழந்தைகளையும் அனாதையாக்கிவிட்டனர். எனது கணவரைக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மோகன்ராஜின் தம்பி ரமேஷ் கூறுகையில்,

நிதிநிறுவன அதிபர் பழனிச்சாமியின் கொலை குறித்து விசாரிக்க போலீதார் என்னையும், எனது அண்ணனையும் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து எங்களை அடித்து, உதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த எனது உறவினர்கள் அங்கு திரண்டுவிட்டனர். இதையடுத்து என்னை விட்டுவிட்டு அண்ணனை விடுவிக்க மறுத்துவிட்டனர்.

பழனிச்சாமியைக் கொன்றது நீதான் என்று ஒப்புக்கொள்ளும் வரை உன்னை விடமாட்டோம் என்று கூறி அடித்தனர். அதில் தான் என் அண்ணன் இறந்தார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+