ராயப்பேட்டை அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர் சஸ்பெண்ட்-அமைச்சர் விஜய் அதிரடி
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் ஆய்வின் போது சுகாதாரம் இன்றி சீர்கேடாக இருந்ததை கண்ட அமைச்சர் விஜய், மருத்துவமனை தலைமை துப்புரவு பணியாளரை சஸ்பெஸ்ட் செய்து உத்தரவிட்டார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையின் முகம் எலியால் கடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள சுகாதார வசதிகள் குறித்து அமைச்சர் விஜய் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவமனைகளில் சுகாதாரமின்றி இருந்ததை கண்ட அமைச்சர் சுகாதார அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத டாக்டர் ஒருவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் விஜய், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பெயரில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்தி வருவதாகவும், இது குறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாரா, சுகாதார அதிகாரி பொற்கை பாண்டியன் ஆகியோர் அவருடன் இருந்தனர்.
மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் சுற்றி பார்த்த அமைச்சர், மருத்துவமனை சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பதை அறிந்தார். இதற்கு காரணமான மருத்துவமனை தலைமை துப்பரவு பணியாளர் திருமாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் மருத்துவ பேராசிரியர் டாக்டர் ஜெயக்குமார், தலைமை நர்சு வசுந்தராதேவி ஆகியோருக்கு நோட்டீசு வழங்க உத்தரவிட்டார்.
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் விஜய் தலைமையிலான ஆலோசனை கூட்டம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துமனையின் மூத்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மருத்துவமனையை தூய்மையாக வைப்பது, நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சைகளை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications