பதவி உயர்வில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு: மசோதா தாக்கல்... ராஜ்யசபாவில் எம்பிக்கள் அடிதடி

தலித்களின் வளர்ச்சிக்கு உதவும் இந்த மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் பாஜக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் கோஷமிட்டனர்.
ஆனாலும், அதையும் மீறி மசேதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந் நிலையில் ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கலின்போது சமாஜ்வாடி கட்சி எம்பிக்கும், பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.
இந்த மசோதாவுக்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவ் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் அவருக்கு தலித்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் பக்கமே தலித்கள் உள்ளனர்.
இதனால் இனிமேலும் அவர்களது வாக்குகள் தனக்குக் கிடைக்காது என்று கருதும் முலாயம் சிங், இந்த மசோதாவை எதிர்க்கிறார். இதன்மூலம் உத்தரப் பிரதேசத்தில் உயர் ஜாதி இந்துக்களின் வாக்குகள் தன் பக்கமாக நகரும் என்பது அவரது கணக்கு.
இன்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்பி நரேஷ் அகர்வால் அவையின் மையப் பகுதிக்கு வந்து பிரச்சனை செய்ய முயன்றார். அவரை பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பி நரேஷ் அகர்வால் தடுக்க முயன்றார்.
இதையடுத்து இரு எம்பிக்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவை ஏற்க பாஜகவுக்கும் மனம் இல்லை. ஆனால், அதை வெளியில் சொல்லாமல் நிலக்கரி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கலாகிவிடாமல் தடுக்க முயன்றது. ஆனால், அதையும் மீறி மசோதாவை மத்திய அரசு இரு அவைகளிலும் தாக்கல் செய்துவிட்டது.












Click it and Unblock the Notifications