முரசொலி செல்வம் மீது முதல்வர் ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு
சென்னை: முரசொலி நாளிதழின் பதிப்பாளர் செல்வம் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 1ம் தேதி முரசொலி நாளிதழி்ல் வெளி வந்த செய்தியில் அதிமுக அரசை செயல்படச் சொல்வதற்கே ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் தேவைப்படுகிறது. தமிழகத்தின் எல்லையில் இருக்கும் கொடநாட்டில் இருந்து உண்ணாது உழைத்து உறங்காது விழித்து பொறுப்புகளை தவறாது புரிந்து வரும் ஆட்சி என்று அவர்களாக கூறிக் கொள்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, முரசொலி பதிப்பாளர் செல்வம் மற்றும் செய்தியாளர் மூர்த்தி ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம் ஆகியோர் மீது முதல்வர் சார்பில் ஏற்கனவே தொடரப்பட்ட அவதூறு வழக்கு நேற்று முதன்மை செஷன்ஸ் நீதீமன்ற நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஜெகன், சிறப்பு அரசு வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கு விசாரணை வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications