பட்டாசு விபத்துகளை விட ஆபத்தான சிவகாசி சாலைகள்!
சிவகாசி: சிவகாசியில் நேற்று நடந்த பெரும் பயங்கரத்தைச் சந்தித்த பட்டாசு ஆலைக்குச் செல்ல முடியால் தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் பெரும் சிரமத்தை சந்தித்து விட்டன. காரணம், மோசமான சாலைகள்.
சிவகாசிக்கு குட்டி ஜப்பான் என்ற செல்லப் பெயர் இருந்தாலும் கூட, ஜப்பான் செழுமையின் ஒரு சாயலைக் கூட இங்கு பார்க்க முடியாது. காரணம், மோசமான அடிப்படை வசதிகளைக் கொண்ட பெரும் கிராமமாகவே இன்றும் இருக்கிறது சிவகாசி. இத்தனைக்கும் எத்தனையோ பெரும் பெரும் தொழில் நிறுவனங்கள் இங்கு குவிந்திருந்தும் கூட சாலை வசதி படு மோசமாகவே உள்ளது.
மிகவும் குறுகலான சாலைகள், எடக்கு முடக்காக திரும்பும் வளைவுகள் என பாதுகாப்பற்ற சாலைகள்தான் சிவகாசிக்கு மக்களை வரவேற்கின்றன. அத்தனை சாலைகளிலும் போக்குவரத்து நிரம்பி வழிகிறது. காரணம், அகலமான பெரிய சாலைகள் எதுவும் இல்லாததால்.
சிவகாசியைச் சுற்றிலும் பட்டாசுத் தொழிற்சாலைகள்தான் நிரம்பிக் கிடக்கின்றன. பெரும்பாலானவை கிராமங்களில்தான் அமைந்துள்ளன. காரணம், பாதுகாப்பைக் கருதி. ஆனால் இந்த கிராமங்களுக்கு அவசரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை அனுப்ப வேண்டும் என்றால் அது பெரும் சிரமமான காரியமாக உள்ளது.
நேற்று கூட பட்டாசு விபத்து நடந்த முதலிப்பட்டிக்குப் போவதற்குள் தீயணைப்பு வண்டிகள் திணறிப் போய் விட்டன. சிவகாசியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் இந்த முதலிப்பட்டி உள்ளது. இந்த ஊருக்குப் போகும் சாலை மகா மோசமாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் சாதாரண டூவீலரில் போவது கூட பெரும் சிரமமான காரியமாகும். இதனால் நேற்று தீயணைப்பு வண்டிகள் இந்த சாலையில் போவதற்கு பெரும் தடுமாற்றத்தை சந்தித்து விட்டனவாம்.
மேலும் காயமடைந்தவர்களை மீட்டு வந்த ஆம்புலன்ஸை இந்த சாலையில் ஓட்ட முடியாததால், சுற்றுச் சாலை வழியாக கிட்டத்தட்ட அரை மணி நேர கூடுதல் பயணத்துடன் ஓட்டிச் சென்றுள்ளனர்.
இதேபோலத்தான் முதலிப்பட்டிக்கும், விருதுநகருக்கும் இடையிலான 15 கிலோமீட்டர் சாலையும் மகா மட்டமாக உள்ளது.
பட்டாசு விபத்துக்களை விட இப்படிப்பட்ட மோசமான சாலைகளால்தான் பெரும் ஆபத்து இருப்பதாக ஊர் மக்கள் புலம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications