தூத்துக்குடி அருகே ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி சதீ்ஷ்குமார் வெட்டிக்கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி சதீஷ் குமார் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி மாடசாமி. கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி இரவு மாடசாமி மற்றும் அவரது மனைவி சவுந்திரவல்லி ஆகியோரை கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 15.5 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபல ரவுடி சதீ்ஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதில் இருந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தினமும் சென்று கையெழுத்திட்டு வந்தார்.
வழக்கம்போல கையெழுத்துப் போட அவர் தனது பைக்கில் கப்பிகுளத்தில் இருந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு கிளம்பினார். அப்போது பின்னால் வந்த ஒரு அம்பாசிடர் கார் சதீஷ் குமார் பைக் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தபோது, காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் அதே இடத்தில் பலியானார். அந்தக் காரை அப்படியே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications