ஆ.ராசா இன்னமும் மத்திய அமைச்சராம்! அரசு இணையதளம் சொல்கிறது

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து தொலைத்தொடர்பு துறை மந்திரியாக இருந்த ஆ.ராசா, 2010, நவம்பரில் பதவி விலகினார். பின்னர் இவ்வழக்கில் 2011-பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட ஆ.ராசா, 2012 மே மாதம் வரை திகார் சிறையில் இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
ஆ.ராசாவுடன், தனி உதவியாளர் ஆர்.கே.சந்தோலியாவும் கைது செய்யப்பட்டார். அவரும் சில காலம் சிறைவாசம் அனுபவித்தார். இவரும் பதவி இழந்தார். ஆனால், இவர்கள் இருவரும் இன்னமும் பதவியில் நீடிப்பதாக, அரசு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இணையதளமான http://www.dot.gov.in/hindi/hindex.htm , http://dot.gov.in/hindi/hwhoiswho1.htm. இந்தி மொழி பகுதியில் மந்திரிகளின் பெயர்களும் இலாகாக்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆ.ராசா என்றும், அவரது தனி உதவியாளர் ஆர்.கே. சந்தோலியா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர இணை அமைச்சர் குருதாஸ் காமத், தொலைத்தொடர்பு துறை ஆணையர் பி.ஜே.தாமஸ் என்றும் தகவல் இடம் பெற்றுள்ளது. குருதாஸ் காமத் தற்போது இந்த துறையின் இணை அமைச்சர் பதவியில் இல்லை. ஆனால், அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
பி.ஜே. தாமஸ் மத்திய கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டு, பின்னர் சுப்ரீம் கோர்ட்டினால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர். இவர் கேரளாவில் 1992-ல் அரசு செயலாளராக பதவி வகித்தபோது, பாமாயில் இறக்குமதி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டது. இதை எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்ததால், ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதே சமயம், மத்திய அரசின் இணையதளத்தில் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், சரியான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தி மொழியில் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள்தான் தவறாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி மொழி இணையதளத்தை நிறைய பேர் படிக்கமாட்டார்கள் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?












Click it and Unblock the Notifications