ஊட்டி அருகே மாதா சிலை பேசியதாக பரபரப்பு: தேவாலயத்தில் குவிந்த மக்கள்
ஊட்டி: ஊட்டி அருகே மாதா கோவிலில் உள்ள மாதா சிலை பேசியதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்.
ஊட்டியில் பிங்கர் போஸ்ட் மாதா கோவிலில் தேவ மாதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு பாதிரியார் அமுல்ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அப்போது மாதாவின் சிலையிலிருந்து சப்தம் கேட்டதாகவும், சிலையின் உதடு அசைந்ததாகவும், கண்கள் மூடித் திறந்ததாகவும் கூறப்பட்டது. இதை அங்கு பிரார்த்தனைக்கு வந்த சிலர் நேரில் பார்த்ததாகக் கூற, பரபரப்பு பற்றிக் கொண்டது.
இந்த தகவல் காட்டுத் தீ போல பரவியது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் விரைந்து வந்து அந்த மாதா சிலையை ஆச்சர்யத்துடனும், அதிசயத்துடனும் பார்த்தனர். சிலர் தாங்கள் கொண்டு வந்த செல்போனில் அந்த சிலையை படம் பிடித்துக் கொண்டு சென்றனர்.
இதனை கேட்டு கோவில் வளாகத்தில் கூடியிருந்த பொது மக்களும், பக்தர்களும் கோவிலுக்குள் சென்று, மீண்டும் மாதா பேசுவார் என சிலை அருகே மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் அது போல எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications