பைபர் படகில் ஏறி முதல் ஆளாக தப்பி கடலுக்குள் ஓடிய உதயக்குமார்!

கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று காலையில் வந்து குழுமிய ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காலை வரை விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதுவரை கூடங்குளம் போராட்டக் குழுவினர் மீது தடியடியோ அல்லது வேறு ஆயுதப் பிரயோகமோ நடத்தியிராத போலீஸார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு மூலம் ஆயிரக்கணக்கான மக்களையும் போலீஸார் சம்பவ இடத்திலிருந்து விரட்டியடித்தனர். இதனால் கடலோரப் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. பலர் இதில் காயமடைந்துள்ளனர். போலீஸார் மீது பொதுமக்கள் கடல் மணலை வீசி எதிர்ப்பைக் காட்டினர். பலர் கடலுக்குள் படகுகள் மூலம் தப்பி ஓடி விட்டனர்.
இந்த நிலையில் மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார், அவரது குழுவைச் சேர்ந்த புஷ்பராயன், தங்கராஜ், மைபா ஜேசுராஜ் உள்ளிட்டோரும் இன்று காலை வரை சம்பவ இடத்தில்தான் இருந்தனர்.
ஆனால் போலீஸார் தடியடியை நடத்தத் தொடங்கியதும் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் கிளாஸ் படகில் ஏறி அங்கிருந்து முதல் ஆளாக தப்பினர். அவர்கள் கடலுக்குள் போய் விட்டார்களா அல்லது வேறு எங்காவது சென்றார்களா என்பது குறித்துத் தெரியவில்லை. இதையடுத்து இவர்களைப் பிடிக்க கடலோரப் பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications