சொத்துக் குவிப்பு வழக்கு... குடும்பத்தோடு வந்து குற்றப்பத்திரிக்கையை பெற்றார் பொன்முடி
விழுப்புரம்: சொத்துக் குவிப்பு மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் இன்று விழுப்புரம் கோர்ட்டில், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. அப்போது அவரது மனைவி விசாலாட்சியும் வந்திருந்து நகலைப் பெற்றுக் கொண்டார்.
வருவாய்க்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாகவும், நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி பொ்ன்முடி மீது புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவரது வீடு, மகன் வீடு, உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய தஸ்தாவேஜுகள் சிக்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து பொன்முடியைக் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
பொன்முடி மீது, 14.7.2012ம் ஆண்டு விழுப்புரம் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கும், அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும், செப்டம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகினர்.
பின்னர் வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று மாஜிஸ்திரேட் கயல்விழி முன்பு பொன்முடி தனது மனைவியுடன் ஆஜரானார். இதையடுத்து அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து வழக்கு செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications