19ம் தேதி வினாயகர் சதுர்த்தி: சென்னையில் 6,500 இடங்களில் சிலைகள்
சென்னை: வினாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் 6,500 இடங்களில் வினாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன. இதையடுத்து சிலைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு வினாயகர் சதுர்த்தி விழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் சென்னையில் சுமார் 6,500 இடங்களில் வினாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்படவுள்ளன.
இந்த சிலைகள் ஒருவார பூஜைக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த முறையும் சிலைகள் வைப்பதற்கு அனுமதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்து அமைப்புகள் சார்பில் கூடுதலான இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இருப்பினும் கூடுதலாக சிலைகள் வைக்க அனுமதித்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதில் பிரச்சனை ஏற்படும் என்பதால் அதற்கு போலீசார் அனுமதி வழங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
வினாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை வைப்போரும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விநாயகர் சிலைகள் அமைக்கும் போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் அமைக்க வேண்டும். ஒரு விநாயகர் சிலையின் உயரம் அதிகபட்சம் 10 அடியாகத்தான் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்ட வாரியம் அளித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட வேண்டும.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை பாதுகாக்க 20 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். தொடர்ந்து 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் சிலையை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிலைகளை எந்தெந்த வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று போலீசார் ஏற்கனவே பாதை வகுத்துள்ளனர். அந்தந்த வழிப்பாதைகளில் மட்டும்தான் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
மேலும் ரசாயன கலவையின்றி களிமண்ணால் செய்யப்படும் சிலைகள் மட்டுமே கடலில் கரைக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அறிவுறுத்தியுள்ளது.
ரசாயனம் கலந்த வினாயகர் சிலைகளை செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதுதொடர்பாக வியாசர்பாடியில் ராஜஸ்தானை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications