உதயகுமார் போன்றோரின் ஏமாற்று பிரச்சாரங்களை நம்பி மக்கள் போராடுகின்றனர்: இல. கணேசன்
தூத்துக்குடி: உதயகுமார் போன்றோரின் ஏமாற்று பிரச்சாரங்களை நம்பி மக்கள் அணு உலையை எதிரித்து போராடி வருகின்றனர் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தனது குடும்பத்தாருடன் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உதயகுமார் போன்றவர்களின் ஏமாற்று பிரச்சாரங்களை நம்பி அங்குள்ள பொதுமக்கள் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இத்திட்டம் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு தற்போது மின் உற்பத்தியை தொடங்கும் தருவாயில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மின் உற்பத்தி நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். இனி வரும் காலங்களில் நீரிலிருந்தோ அல்லது காற்றிலிருந்தோ மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
அணு மின் உற்பத்தியில் மட்டுமே மின்தட்டுப்பாட்டை போக்க முடியும். ஆபத்து என்பது எந்த நிலையிலும் வரலாம். சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் இறந்தனர் என்பதற்காக அங்கு பட்டாசு தொழிற்சாலைகளோ, தீப்பெட்டி தொழிற்சாலைகளோ செயல்படாமல் இல்லை. பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வல்லுனர்கள் பலர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அது பாதுகாப்பானது என்று தெரிவித்தனர். அதன் பிறகும் போராட்டக்குழுவினர் பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கதாகும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications