கூடங்குளம் அணு உலையை மூடும் வரை போராட்டம் - திருமா

திருமாவளவனின் 50வது ஆண்டு விழா, அக்கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டம் சார்பாக தமுக்கம் மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் திருமாவளவன் பேசியது:
இதுவரை 6 மாவட்டங்களில் நடந்த பொன்விழா நிகழ்ச்சிகள் மூலம் மொத்தம் எனக்கு 8 ஆயிரம் கிராமிற்கு மேல் தங்க பொற்காசுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பொற்காசுகள் அனைத்தும் எனக்கோ, எனது குடும்பத்திற்கோ அல்ல. எல்லாம் நமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குதான். இன்று அனைத்துக் கட்சிகளுக்கும் தொலைக்காட்சிகள் உள்ளன. ஆனால் நமது கட்சிக்கு தொலைக்காட்சி இல்லை.
இந்த குறையை போக்குவதற்கும், நமது கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காகவும் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்கப்பட உள்ளது. கூடங்குளம் போராட்டக்காரர்களை ஆரம்பத்தில் ஊக்குவித்த தமிழக அரசு, தற்போது அவர்களை எதிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை.
கூடங்குளம் அணு உலையை மூடும் வரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும். போலீசில் சரண் அடையும் அளவுக்கு உதயகுமார் எந்த குற்றமும் செய்யவில்லை.
பிற்படுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
பதவி உயர்வில் ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். பதவி உயர்வு இட ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோரையும் சேர்க்க வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டு, அதன்பின் அதில் இதர பிற்படுத்தப்பட்டோரையும் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications