உயிரைப் பற்றி கவலைப்படுபவன் நான் அல்ல: கரூர் மாநாட்டில் வைகோ பேச்சு
திராவிட இயக்க நூற்றாண்டு விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக மாநாடு கரூரில் கடந்த 15ம் தேதி ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த மிக பிரமாண்ட பந்தலுக்கு எஸ்.வி சாமியப்பன் பெயரும், மாநாட்டு அரங்கத்திற்கு மணச்சநல்லூர் நடராஜன் பெயரும், மாநாட்டு நுழைவாயிலுக்கு டி.பி.மூர்த்தி பெயரும் வைக்கப்பட்டன.
மூத்த தலைவர்களான திருப்பூர் துரைசாமி, டாக்டர் இரா.மாசிலாமணி, நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், அ.மலர்மண்ணன், இமயம் ஜெயராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிறைவுரை நிகழ்த்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,
அடுத்த மாநாடு தஞ்சையில் இரண்டு நாள் மாநாடாக நடைபெறும். முதல் நாளன்று பேரணியும், மறுநாள் காலையி்ல் பட்டிமன்றமும், மாநாடும் என இரண்டு நாள் நடைபெறும். ஈழத்தில் நம் தொப்புள் கொடி சொந்தங்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சிக்கு வருகின்றார்.
அவருக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கிறது. ஆனால் மதிமுக சார்பில் கறுப்புக்கொடி காட்டும் அறவழி போராட்டம் நடைபெறும்.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ராஜபக்சேவை வரவேற்பதை நாங்கள் நிறுத்த முடியாது. நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
நான் அவருக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், வைகோ அங்கு தொண்டர்களுடன் வருவான். அமைதி வழியில் அறவழி போராட்டம் நடைபெற்றே தீரும். இதை யாரும் தடுக்க முடியாது. இந்த உயிர் இருப்பதும் ஒரு முறை, போவதும் ஒரு முறை என்பதால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்றார்.
சாகும் வரை மதிமுகவில் இருப்பேன்- பெரியார் தாசன்:
எனது இறுதி மூச்சு உள்ள வரை மதிமுகவில் இருப்பேன் என்று பேராசிரியர் பெரியார்தாசன் உருக்கமாகக் கூறினார்.
கரூரில் நடந்த மதிமுக மாநாட்டில் பேசிய பெரியார்தாசன் கூறுகையில்,
பெரியார், அண்ணா ஆகியோருக்கு அடுத்து ஒரு தலைவன் என்றால் அது வைகோ தான். இங்கு வந்த இடிந்தகரையைச் சேர்ந்த கலைக்கழு நண்பர்கள் என்னிடம் வேறு கட்சிக்கு சென்றுவிட வேண்டாம். இங்கேயே இருந்து சேவை செய்யுங்கள் என்றனர். நான் அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு மரணம் வரும் வரை மதிமுகவில் தான் இருப்பேன், வைகோவுடன் தான் இருப்பேன் என உறுதி அளிக்கின்றேன் என்றார்.













Click it and Unblock the Notifications