இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர்?
சேலம்: இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
ஆத்தூர் அண்ணா கலையரங்கில் செப்டம்பர் 15ம் தேதி கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்று நடந்தது. உலகத்துக்கு எதிர் வரும் ஆபத்தை காப்பதற்கான எழுப்புதல் என்ற பெயரில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மதபோதகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உமாசங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும்பகுதி ஒரு அழிவை சந்திக்க உள்ளது. இதிலிருந்து நீங்கள் அனைவரும் தப்பிக்க வேண்டும்.
கிறிஸ்துவ மதத்தின் கருத்துகளை, பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கிறிஸ்துவர்கள் யாரும் ஜாதகம் பார்க்க கூடாது, உங்கள் வீட்டில் ஜாதகம் இருந்தால் உடனே தூக்கி தீயில் போட்டு கொளுத்துங்கள். அதுமட்டுமல்ல, ராகுகாலம் எமகண்டம் போன்ற தகவல்களை குறிப்பிட்டுள்ள காலண்டர்களையும் வீட்டிலிருந்து தூக்கி வீசுங்கள். ஆழத் தீயிட்டு கொளுத்துங்கள், குப்பைகளில் வீசியெறியுங்கள் என்று பேசியதாக தெரிகிறது.
இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்து மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி பேசிவரும், தமிழக அரசின் ஒழுங்கு ஆணைய கமிஷனர் உமாசங்கரை கைது செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, இந்து முன்னணி, சேலம் மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமையிலான நிர்வாகிகள், நேற்று, ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மேற்கு மண்டல ஐஜி, சேலம் எஸ்பி உள்ளிட்டோருக்கும் புகார்களை அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications