2014 வரை மத்திய அரசு நீடிக்காது; அதற்கு முன் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்- அத்வானி

இது தொடர்பாக அத்வானி கூறியுள்ளதாவது:
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விவகாரத்டில் முன்பு நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு வாக்குறுதியை அளித்தார். இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களிடமும் கலந்து பேசி கருத்தொற்றுமை ஏற்படும் வரை நாங்கள் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். ஆனால் அதற்கு மாறாக அன்னிய நேரடி முதலீட்டு முடிவை மத்திய அரசு அறிவித்திருப்பதை நாடாளுமன்ற நம்பிக்கை மீறலாகவே நாங்கள் கருதுகிறோம். இதனால் இது குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டும்படி நாங்கள் கோருவோம்.
நிலை குலைந்த அரசு- நீடிக்குமா?
மம்தா எடுத்துள்ள முடிவால் இப்போதைய மத்திய அரசு நிலைகுலைந்துள்ளது. எப்போது அரசு கவிழும் என்பதே கேள்வி. 2014 வரை இந்த அரசு நீடிக்காது. அதற்கு முன் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் அவர்.
சரத் யாதவ் எதிர்ப்பு
ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் கூறுகையில், "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எந்தப் பிரச்னையும் தீராது'' என்றார்.
சிறப்புக் கூட்டத் தொடர் ஏன்?
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று பாஜக கூறினாலும் மத்திய அரசின் பலம் என்ன? என்பதை அம்பலப்படுத்துவதற்குத்தான் இந்தக் கோரிக்கையை பாஜக முன்வைப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை திரிணாமுல் விலக்கிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அரசின் முடிவை எதிர்த்து திமுகவும் சமாஜ்வாதியும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. பகுஜன் சமாஜ் மட்டும்தான் ஆதரிக்கிறது. இதனை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் மூலம் அம்பலப்படுத்துவது என்பதுதான் பாஜகவின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications