இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தை தமிழக அரசால் தீர்க்க முடியாமல் போனது ஏன்?– கருணாநிதி
சென்னை: சென்னை அண்ணாசாலையில் இஸ்லாமிய அமைப்பினர் 5 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்தை தமிழக அரசால் சுமூகமாக தீர்க்க முடியாமல் போனது ஏன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்கத் திரைப்படத்தைக் கண்டித்து 24 முஸ்லிம் அமைப்புகள் செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரால் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த திடீர் போராட்டத்தினால் அண்ணாசாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வாகனங்கள் எரிக்கப்பட்டன. அரசுபேருந்துகள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து போலீஸ் தடியடி நடத்தியது. போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடைபெற்றதால், அந்தப் பகுதியே போர்க்களம்போல காட்சியளித்துள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டு, அண்ணாசாலையில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
5 நாட்களாக தொடர் போராட்டம் நடந்துவரும் நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்துவோரின் பிரதிநிதிகளிடம் அரசு சார்பில் பேசப்பட்டது. ஆனாலும் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தவாறு சுமுகமாகத் தீர்க்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கருணாநிதி தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இடிந்தகரை தேவாலயத்திற்குள் போலீஸ் அத்துமீறி நுழைந்ததை கண்டித்து கிறிஸ்துவ ஆயர் பேரவைத் தலைவர் ஏ.எம்.சின்னப்பா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அரசு அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்களை மைனாரிட்டி அரசு என்றும் 356 பிரிவைப் பயன்படுத்தி கலைக்கவேண்டும் என்றும் அடிக்கடி கூறிவந்த ஜெயலலிதா,தனது ஆட்சிக்காலத்தில் மைனாரிட்டி மக்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.











Click it and Unblock the Notifications