கமிஷனர் ஜார்ஜுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் திடீர் சந்திப்பு

அமெரிக்கர் ஒருவர் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமையும் இழிவுபடுத்தி எடுத்த திரைப்பத்தால் உலக நாடுகள் அனைத்திலும் உள்ள இஸ்லாமியர்கள், அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர். சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக இஸ்லாமியர்கள் கூடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கில் இவர்கள் கூடுவதால் அண்ணா சாலைப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் வன்முறையும் மூண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கமிஷனராக இருந்த திரிபாதியின் பதவி பறிக்கப்பட்டது. புதிய ஆணையராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க துணைத் தூதர் ஜெனிபர் தலைமையிலான இரு நபர் குழு ஒன்று கமிஷனர் ஜார்ஜை இன்று ஆணையர் அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது
யாராயிருந்தாலும் சரி... கமிஷனர் ஜார்ஜ் விடுத்த எச்சரிக்கை!
இதற்கிடையே, சென்னையில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பவர்கள், யாராக இருந்தாலும் சும்மா விட மாட்டோம், கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கமிஷனராகப் பொறுப்பேற்ற பின்னர் ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எனக்கு அளிக்கப்பட்டுள்ள சவாலான இந்த பொறுப்பை, தன்னடக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரது ஒத்துழைப்புடன் சவால் நிறைந்த இந்த பணியை சிறப்பாக செய்வேன்.
சென்னை நகரம் பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியதாகும். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது, குற்றங்களை தடுப்பது, குற்றங்களை குறைப்பது, போக்குவரத்தை சீர்செய்வது போன்றவற்றை தலையாய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் யாராக இருந்தாலும், அவர்களை சும்மா விடமாட்டோம். அவர்களிடம் சமாதானம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அமைதி நிலைநாட்டப்படும்.
மெட்ரோ ரெயில் பணி போன்ற பல்வேறு பணிகளால் சென்னையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி போன்ற அமைப்புகளோடு சேர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை நகர மக்கள் நம்பிக்கையோடு, எளிதில் போலீசாரை தொடர்பு கொண்டு, தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாக்கப்படும். சென்னை மக்களுக்காக நான் ஏற்கனவே துணை கமிஷனராகவும், இணை கமிஷனராகவும் பணியாற்றி இருக்கிறேன் என்றார் ஜார்ஜ்.












Click it and Unblock the Notifications