இந்தியாவில் 70 சதவீதம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு: அதிர்ச்சித் தகவல்

இந்தியா தற்போது பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. எனவே நாட்டு மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்து வருகிறது என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வின் மூலம் இந்தியாவில் உள்ள 70 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள் உட்பட மொத்தம் 36 நாடுகளில் உள்ள குழந்தைகளின் ஊட்டசத்து நிலவரம் குறித்த ஆய்வில் குழந்தைகளை காப்போம் (சேவ் த சில்டுரன்) என்ற அமைப்பு ஈடுபட்டது. இதன் முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் பிறக்கும் 50 சதவீதம் குழந்தைகள் எடை குறைந்து பிறக்கின்றனர். அதேபோல 70 சதவீதம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அனீமியா போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளது.
இந்தியாவில் மற்ற பிரிவினரை விட ஏழை குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளில், ஊட்டசத்து குறைபாடு உள்ளவர்கள் 2 மடங்கு அதிகமாக உள்ளனர். மேலும் பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளில் 20 சதவீதம் பேருக்கு ஊட்டசத்து குறைபாடு
காணப்படுகிறது. இதனால் நாட்டில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க, அரசின் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் இறப்பு விகிதம்
ஆனால் கடந்த 1990 முதல் 2011ம் ஆண்டு வரை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறக்கும் அளவு குறைந்துள்ளது. கடந்த 1990ம் ஆண்டு 5 வயதிற்குட்பட்ட 12 மில்லியன் குழந்தைகள் இறந்தனர். ஆனால் 2011ம் ஆண்டு இது 6.9 மில்லியனாக குறைந்துள்ளது.
இந்தியாவின் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள் ஆகிய நாடுகளும் ஆய்விற்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடு பிரச்சனையில், இந்தியாவின் அண்டை நாடுகள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இது குறித்து குழந்தைகளை காப்போம் அமைப்பின் இந்திய சி.இ.ஓ. தாமஸ் சாண்டி கூறியதாவது,
இந்தியாவில் குறிப்பிட்ட இடங்களிலும், சில சமூகத்தினர் இடையும் தான் ஊட்டசத்து குறைபாடு அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்துள்ளோம். அதற்கான காரணங்களை கண்டுபிடித்துள்ளோம். இந்த
ஆய்வின் முடிவில் நாட்டில் உள்ள ஊட்டசத்து குறைபாட்டை போக்க, சிறந்த வளங்களும், திட்டங்களும் தேவை என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் மாநில அரசுகளின் சிறந்த திட்டங்களின் மூலம் குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடு, பிரசவ கால இறப்பு ஆகியவை குறைந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications